Saturday, October 22, 2016

தமிழ்நாடானது, 'குப்பை நாற்றத்தில்' இருந்து மீளும் காலம் நெருங்குகிறது!


சில வருடங்களுக்கு முன், புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்திற்கு சென்று, மலை மேல் உள்ள கோட்டையையும், அடுத்தடுத்து இருந்த, பிரமாண்டமான, ஒரே   மலையின் பக்கங்களில் இருந்த, குகை கருவறை உள்ளிட்ட, ‌சிவன், விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்கான‌ தனித்தனி கோவில்களையும் பார்த்து வியந்தேன்.

சீரங்கம் ர‌ங்கநாதரை விட, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான கருவறையில்,  அனைவரும் அர்ச்சகர்  ‘அருகே’  நின்று வழிபட்டதானது,  'பெரியார்' கொள்கையாளனாக முன்பு பயணித்த,  எனக்கு வியப்பானது.

மத்திய அரசின் ASI கட்டுப்பாட்டில் உள்ள அந்த சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை பூட்டப்பட்டு இருந்ததும், அந்த அலுவலகம் சென்று, 'அழுத்தம்' கொடுத்து; 

சாவியை வாங்கி, சரியாக பராமரிக்கப்படாத கழிவறை சென்று வந்ததும், மறக்க முடியாத அனுபவமானது.

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் எல்லாம், பெரும்பாலும் மேற்சொன்ன வகையில், நன்கு பராமரிக்கப்படும்  கழிவறைகள் இன்றி செயல்பட்டு வருகின்றன;

தமிழ்நாட்டின் சுற்றுலா  வருமான வளர்ச்சிக்கு தடைகளாக‌.

அண்மையில் தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக்கில்  4 நாட்கள் தங்கி, நகரங்களில் உள்ள‌ தெருக்கள் மட்டுமின்றி, நகரத்திற்கு வெளியே சுமார் 300 கி.மி வரை காரில் பயணம் சென்று, மிதக்கும் 'மார்க்கெட்' உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களுக்கும் சென்று வந்தேன்.

பின் சிங்கப்பூரிலிருந்து காரில், மலேசியாவில் உள்ள 'மலாக்கா' நகருக்கும் சென்று 2 நாட்கள் தங்கி வந்தேன்.

தாய்லாந்திலும், மலேசியாவிலும் உள்ள ஊழலானது, திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றும் அளவுக்கு மோசமில்லை என்பதை, அங்கெல்லாம் ஒழுங்காக‌ செயல்படும் பாதாள சாக்கடைகளும், சாலைகளும் உணர்த்துகின்றன. இரண்டு நாடுகளிலும், எந்த இடத்திலும் குப்பை நாற்றம் வீசவில்லை; கழிவறைகள் இலவசமாக, நம்மூர் கட்டணக் கழிவறைகளை விட மிக, மிக சுத்தமாக இருந்தன. 

கட்டணம் செலுத்தி தாய்லாந்து அரண்மனைக்கு - மலாக்காவில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கிறித்துவ ஆலயத்திற்கு தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 10% கூட, அதை விட காலத்தால் முந்தைய, அரிய கலை பொக்கிஷங்களையுடைய‌ திருமயம் சுற்றுலா தளத்திற்கு, ஒரு மாதத்தில் வருகிறார்களா? உலகிலேயே அரிய இசையியல் (musicology) தகவல் முக்கியத்துவம் மிகுந்த குடுமியாமலை இசைக் கல்வெட்டை பார்க்க,‌ ஒரு வருடத்தில் வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமிழ்நாட்டில், குறிப்பாக  மழைக் காலங்களில், கழிவறை நாற்றம் வரவேற்காத பேருந்து நிலையங்கள் இருப்பது அபூர்வமாகும்.

அது போன்ற 'வரவேற்பை' சுற்றுலா பயணிகளுக்கு வழங்க, தமிழ்நாட்டில் உள்ள நகரங்களும், ஊர்களும், 'போட்டி போட்டு' முன்னேறி வருவதை, கீழ்வரும் செய்தி உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் ஒழுங்காக செயல்படாத 'பாதாள சாக்கடை' திட்டங்களில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்த பணங்களையும், அந்தந்த ஊர் அரசியல் கொள்ளையர்களின் பணங்களையும் பறிமுதல் செய்தால்;

தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும், நகரங்களிலும்,  ஊர்களிலும்,  'குப்பை நாற்றம் ‘வரவேற்பதை’ ஒழிக்க முடியும்; எஞ்சிய பணத்தை கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிட்டு, தமிழ்நாட்டை மீட்க முடியும்.

சிங்கப்பூரை விட, தாய்லாந்தை விட, மலேசியாவை விட, இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, அதிக அளவில் சுற்றுலா  வருமானம் ஈட்ட முடியும். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும்.

ஊழலுக்கு எதிரான‌, அதற்கான சமூக அழுத்தமானது, கோபக்கனலாக, கீழ்நடுத்தர, ஏழை மக்களிடம் உருவாகி வளர்ந்து வருகிறது; தேர்தல் காலங்களில்,  ‘தமது கிராம/பகுதி பொதுப் பிரச்சினையை தீர்த்தால் தான், ஓட்டு கேட்க உள்ள வரலாம்', என்று ஆளுங்கட்சியையே 'மிரட்டி' காரியம் சாதிக்கும் அளவுக்கு;

அது அரசை செயல்பட வைக்கும்;

'வாழ்வியல் புத்திசாலி'(?) அரசியல் கொள்ளையர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், தமது 'கொள்ளைப்  பணத்தின்' ஒரு பகுதியை அந்த ஊர் நலன்களுக்கு செலவு செய்து, 'கோபக் கனலிலிருந்து' தப்பிக்க முயலும்;

வளர்ச்சிப்  போக்கானது;

மேல் நடுத்தர, பணக்கார தமிழர்களின்   'பாதுகாப்பு வளையம்'  (Safe Zone) மனப்பாங்கு காரணமாக, 'தடை'யில் சிக்கி உள்ளது.

அதே நேரத்தில், அந்த 'பாதுகாப்பு வளையத்தில்' வாழ்வதற்கு அவர்கள் கொடுத்து வரும் விலைகளின் 'இழிவான போக்கு', அந்த பாதுகாப்பு வளையத்தை வேகமாக பலகீனமாக்கி வருகிறது.  

அந்த விலைகள் யாவை? என்பதையும் மிக சுருக்கமாக பார்ப்போம்.

நல்ல வசதியுள்ள, குறுக்கு வழிகளில் பணம் சேர்க்க வாய்ப்புகள் வந்தாலும் ஒதுக்கித் தள்ளும் இயல்புடைய எனது நண்பர் ஒருவர், சிறையில் இருந்த, ஊழல் வழக்கில் சிக்கிய,  முன்னாள் அமைச்சரை பார்க்கச் சென்றதானது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக, அவரிடம் விவாதித்தேன்.

இன்று தமிழ்நாட்டில் 'நேர்மையான' வழிகளில் பணம் ஈட்டி, மேல் நடுத்தர, பணக்காரர்களாக வாழ்பவர்கள் எல்லாம், அந்தந்த ஊர் ஆளுங்கட்சி/எதிர்க்கட்சி முக்கிய  நபர்களுடன் 'நல்லுறவு'  பேணாமல், 'நிம்மதியாக' வாழ முடியாது. அந்த 'நிம்மதியான' வாழ்விற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற, இழிவான- அந்த 'அரசியல் கொள்ளையர்களின் குடும்ப திருமணங்களுக்கு போக வேண்டியது உள்ளிட்ட‌-  சமரச போக்குகளை கடைபிடித்தாக வேண்டும்.

அப்படியென்றால், (கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அந்த அரசியல் கொள்ளையர்களின் பாவத்தின் 'பங்கு', நம்மையும் நமது குடும்பத்தையும் தீண்டாதா?

என்ற கேள்வியை, நான் அது போன்றவர்களிடம் தொடர்ந்து எழுப்பி வருகிறேன்; அந்த 'பாதுகாப்பு வளையத்தை’  சீர் குலைக்கும் முயற்சிக்கு எனது பங்களிப்பாக.

சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களை ஒதுக்கி, இயற்கையோடு இயைந்து, எளிமையாக வாழ்வதில் கிடைக்கும் 'நம்ப முடியாத பலன்களையும்',  அவர்களிடம் பகிர்ந்து கொள்வதால், அது அந்த 'பாதுகாப்பு வளையத்தை  சீர் குலைக்கும் முயற்சிக்கு, வலிமையையும் கூட்டி வருகிறது. (Joyful Life: Do they, the inanimate, have life? ; http://veepandi.blogspot.in/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

ஊழலுக்கான துணிச்சலற்ற 'கோழை யோக்கியர்கள்', அரசியல் கொள்ளையர்களுடன் 'நேசமாகி', வாழ்ந்து கொண்டே, ஊடகங்களில் வெளிவரும், ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை பாராட்டி, 'ஒழுக்க சீலர்களாக' வெளிச்சம் போடும் கூத்தும், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களுடன் 'நேசமாகி', 'அதி வேகமாக' வளர்ந்த, 'அதி புத்திசாலி(?) பெரியார் சமூக கிருமிகள்',  ஊழல் ஒழிப்பு கட்சிகளில் பொறுப்பு வகித்த கூத்துகள், அந்த போக்கின் உச்சக்கட்டமாகும்.

அந்த பாதுகாப்பு வளையமானது, தமிழ்நாட்டில் தமது புலமையையும், விபச்சார தொழில் நுட்பத்தில் 'பிணைத்து' பயணிக்கும், முற்போக்கு/பிற்போக்கு 'புலமையாளர்களை', 'அம்பலமாகாமல்' பாதுகாத்தும் வருகிறது. அரசியல் கொள்ளையர்களை 'நாடி', உதவிகள் பெறும், 'பணத்தையே குறி'யாகக் கொண்ட‌, எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று கணித்து மதிக்கும்/ஒதுக்கும், முயற்சியாளர்கள், அதே நேரத்தில், அவர்களின்/தமது 'சுய உருவத்தை' கண்டுபிடித்தவர்களின், முதுகுக்குப் பின்னால், அவர்களின் 'குறைகளை' பேசி, 'ஒழுக்க சீலர்களாக' வேடம் போடும்- 'பாதுகாப்பு வளையத்தில்' வாழும்- புலமையாளர்கள்(?), உலகில் வேறு எங்கும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை; தமிழ்நாட்டைத் தவிர. எனவே தமிழ்நாட்டின் அறிவுப்புலத்தில், ‘அந்த குப்பைகளின் நாற்றமும்’ சகிக்க முடியாத இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட புலமையும், புலமையாளர்களும்,  தமிழ்நாட்டில் தனித்துவமாக ‌(unique), 'அடையாளச் சிதைவோடு’ வளர்ந்த அரசியல் நீக்கப் போக்கின் (Depoliticize) விளைவுகள் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/10/depoliticize10-social-induction.html )

தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்களுக்கு வர வேண்டிய தேவையில்லாமல், 'பாதுகாப்பு வளையத்தில்' வாழும் மேல் நடுத்தர, பணக்கார குடும்பங்களில், பணத்துக்காக எதையும் இழக்க தயாரான, ‘மனித மதிப்பீடுகளை (Human Values) இழந்த கழிவுநாற்றம்’ வீசும் குடும்பங்களும், எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'அகம்' தொடர்பான அந்த கழிவு நாற்றமும், 'புறம்'  தொடர்பான பேருந்து நிலைய கழிவு நாற்றமும், ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த 'பாதுகாப்பு வளைய' சமரச போக்கில் 'சிக்கியிருந்த', எனது உறவினர்களை, நான் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, 'பாதுகாப்பான' தூரத்தில் தள்ளி வைக்காத காரணத்தால்;

'பெரியார்' ரசிகராக, 'பெரியார் கொள்கை' வேடமிட்டிருந்த, இயல்பில் சிற்றினமானவர்களை, 'சமமாக' கருதி, எனது குடும்பத்தில் நான் அனுமதித்த 'பாவத்திற்காக', எனது குடும்பத்தில் சீர்குலைவு ஏற்பட்டு, அதன் விளைவாக, இது போன்ற ஆய்வுகளிலும், எனது இசை ஆய்வுகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி, பயணித்து வருகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlநானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ புரியும், இது போன்ற 'சமூக பாவங்களின்' விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அந்த 'சமூக பாவங்களின்' ஊற்றுக்கண்களை தேடி, சமூகத்திற்கு கேடான 'பாதுகாப்பு வளையத்தை' அழிக்க, பங்களிப்பு வழங்கி, 'பாவ விமோசனம்' பெற்று வருகிறேன்.

அந்த 'பாதுகாப்பு வளையத்தை’  சீர் குலைக்கும் முயற்சிக்கும்,  நல்ல வரவேற்பு இருப்பதானது;

தமிழ்நாடானது, எனது குடும்பம் உள்ளிட்டு, அகம், புறம் தொடர்பான‌ 'குப்பை நாற்றத்தில்' இருந்து மீளும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

No comments:

Post a Comment